தேர்தலில் போட்டியிட தகுதியில்லை: முஷாரப்பின் வேட்புமனுவை பாக். தேர்தல் ஆணையம் தள்ளுபடி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அண்மையில் தான் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பினார். பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் தான் அவர் நாடு திரும்பினார். தேர்தலில் போட்டியிட அவர் என்ஏ- 139 கசூர் தொகுதியில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார். பாகிஸ்தானின் 4 மாகாணங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் முஷாரப் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஜாவித் கசூரி என்பவர் தேர்தல் ஆணையத்தை அணுகினார். இது குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் முஷாரப்பிற்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்று கூறி அவரது வேட்புமனுக்களை தள்ளுபடி செய்தது.
கசூரி போன்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் தலைவர் அஹ்சான் இக்பால் முஷாரப்பின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த காரணத்திற்காக முஷாரப் பாகிஸ்தான் வந்தாரோ தற்போது அதுவே பகல் கனவாகிவிட்டது.