இந்தியாவில் வயிற்றுப் போக்கிலிருந்து 1.5 லட்சம் குழந்தைகளை காக்க யுனிசெப் புதிய திட்டம்
டெல்லி: இந்தியாவில் டையரியா எனப்படும் வயிற்றுப் போக்கிலிருந்து 1.5 லட்சம் குழந்தைகளை காக்க யுனிசெப் புதிய திட்டம் ஒன்றை செயல் படுத்த உள்ளது.
டெல்லியில் உள்ள கனடா நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய யுனிசெப் அதிகாரி இது குறித்து கூறியதாவது, 'யுனிசெப் கனடா மற்றும் டெக் என்ற நிறுவனம் சுரங்கம் மற்றும் தாது பொருள் மேம்பாட்டு தொழிலில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், குழந்தைகள் உடல்நலத்திற்கான ஜிங்க் அல்லையன்ஸ் என்ற பெயரின் கீழ் 5 மில்லியன் டாலர் செலவில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் இந்தியாவில் வாழும் 1.5 லட்சம் குழந்தைகளின் வாழ்வை பாதுகாக்கும்.
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமான எண்ணிக்கையில் வயிற்றுப் போக்கால் மரணம் அடைகின்றனர். இந்த வியாதியை ஒழிப்பதற்கு பயன்படும் வகையில் தனித்தன்மை கொண்ட ஜிங்க் தாதுவின் உபபொருள்களை கொண்டும் மற்றும் தாது உப்புகள் கொண்டும் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இந்தியாவில் சுகாதார மேம்பாடு ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ‘இந்தியாவில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இவ்வியாதியினால் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், நாட்டில் 2 சதவீதம் என்ற அளவிலான குழந்தைகளே ஜிங்க் தாது பொருள் சக்தியை பெற்றுள்ளனர் என்றும் எங்களது திட்டத்தின் அடிப்படையில் இதனை அதிகப்படுத்துவதால் டையோரியா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஆகும் செலவு குறைக்கப்படும் என்றும் இத்திட்டத்தினால் 5 வருடங்களில் 1.5 லட்சம் குழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.