நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது: ப.சிதம்பரம் உறுதி
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதியாக கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, " 170 நாடுகளை சேர்ந்த 2½ லட்சம் தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும், அந்த கறுப்பு பணத்தை கொண்டு போலி கம்பெனிகள் தொடங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கி உள்ளதாகவும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் அடங்கும். இதில் வெளிவந்த பெயர்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது" என்றார்.
கோப்ராபோஸ்ட்:
"ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி போன்றவற்றின் அதிகாரிகள் பலர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பது, ‘கோப்ராபோஸ்ட்' மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் (ஸ்டிங் ஆபரேஷன்) அம்பலமானது.
வரிச்சட்ட மீறல்:
இந்த பிரச்சினையை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. நாங்களும் அவற்றை ஆராய்ந்து வருகிறோம். இதில் (வரிச்சட்டங்கள்) மீறப்பட்டிருப்பதாக தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பற்றாக்குறை குறைவு தான்:
நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்தமட்டில், 2012-13-ம் நிதி ஆண்டுக்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில்தான் இருக்கும். நிதி பற்றாக்குறை நான் ஏற்கனவே கணித்ததைவிட 5.2 சதவீதத்தை காட்டிலும் குறைவாக இருக்கும்.
தங்க இறக்குமதி:
நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கிற விதத்தில், ஏற்றுமதி அதிகரிக்கப்படும். தேவையற்ற இறக்குமதிகள் குறைக்கப்படும். பணவீக்கத்தின் காரணமாக தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. நாங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
மறைமுக வரி வருவாய்:
நேரடி வரி வருவாய் சற்றே குறைந்துவிட்டாலும் கூட, மறைமுக வரி வருவாய் திருத்திய மதிப்பீடை மிஞ்சிவிட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.10.38 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் உயர்வு ஆகும். இது பாராட்டத்தக்கது. இலக்குகளை எட்டி சாதிப்போம். 2013-14-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் 6 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக இருக்கும்.
வோடாபோன் வரி:
வோடாபோன் வரி விவகாரத்தை பொறுத்தமட்டில், பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வழியை கண்டுபிடித்த பின்னர் பாராளுமன்றத்தில் வருமானவரி சட்ட திருத்தங்களை கொண்டு வருவோம். (இங்கிலாந்தை சேர்ந்த வோடாபோன் நிறுவனம் ரூ.11,200 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது. இதில் அது மத்திய அரசிடம் சமரசம் எதிர்பார்க்கிறது.)
சமரசம் உண்டா?
தற்போதைய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இதில் சமரசம் செய்வது குறித்து மத்திய மந்திரிசபைதான் இறுதி முடிவு எடுக்கும்.
நேரடி மானியத்திட்டம்
மானியங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு போய் சேர்க்கிற நேரடி மானிய திட்டம், 2013-14-ம் நிதி ஆண்டின் இறுதிக்குள் (அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்) நாடு முழுவதும் அமலுக்கு வந்து விடும். அந்த வகையில், சமையல் கியாஸ் மீதான மானியத்தை விரைவாக இந்த திட்டத்தின் கீழ் மக்களிடம் நேரடியாக கொண்டு போய் சேர்க்க விரும்புகிறோம்.
மானிய கியாஸ்:
சமையல் கியாஸ் வினியோகம் பெறுகிற 14 கோடி பேருக்கு மானியம் வழங்குவது குறித்து பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லியிடம் விரைவில் விவாதிப்பேன்.
முன்கூட்டி தேர்தலா?
பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. உரிய நேரத்தில், அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.
அடுத்த ’மே’யில் தேர்தல்:
மத்திய மந்திரிகள் சிலரை கட்சிப்பணிக்கு காங்கிரஸ் அனுப்பப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறதே என கேட்கிறீர்கள். எதற்காக அரசாங்கம் தேர்தலை முன்கூட்டி எதிர்பார்க்க வேண்டும்? நாங்கள் 2013-14-ம் நிதி ஆண்டுக்கான எங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதன்பின்னர் மே மாதம் தேர்தலை சந்திப்போம்.
காப்பீடு, ஓய்வூதிய சீர்திருத்தம்
காப்பீடு, ஓய்வூதிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். இது தொடர்பாக அவர்களை மீண்டும் சந்திப்பேன். அவர்கள் தங்கள் கட்சிக்குள் இதுபற்றி பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதில் முக்கிய எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) முடிவுக்கு வந்து விட்டால், பிற கட்சிகளுடன் பேசுவோம். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.