40 அடி உயரத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குள் பாய்ந்த அரசு பஸ்: 10 பேர் காயம்
சென்னை: சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து செம்பரம்பாக்கம் ஏரி மேம்பாலத்தில் இருந்து ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பேருந்து ஒன்று இன்று காலை 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்றது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பேருந்து பாலத்தின் சுவர்களை இடித்துக் கொண்டு 40 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.