இண்டேன் கியாஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக்- 14 மாவட்டங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு
திருச்சி: இண்டேன் கியாஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால், 14 மாவட்டங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் மையம் :
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் (ஐ.ஓ.சி) இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் மையம் கடந்த 95-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 70 லாரி களில் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
1 லாரிக்கு 306 சிலிண்டர் வீதம் 70 லாரிகளில் 21,420 சிலிண்டர்கள் கியாஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி லாரிகளில் லோடு ஏற்றி அனுப்பும் பணியை இந்தியன் ஆயில் எம்பிளாயிஸ் யூனியன் சங்கத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கியாஸ் நிரப்பும் ஒரு கிரஸ் சர் எந்திரமும், லோடு ஏற்றும் பணியில் 36 தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகப்படியான சிலிண்டர்கள்:
இந்நிலையில் இந்தியன் ஆயில் காப்பரேசன் நிறுவனம் மேலும் 70 லாரிகளில் கியாஸ் சிலிண்டர் லோடுகளை நிரப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தது. இதற்காக ஏற்கனவே உள்ள 36 தொழிலாளர்களை தவிர மேலும் 36 தொழிலாளர்களையும் நியமிக்க முடிவு செய்தது. ஆனால் தொழிலாளர்கள் 80 ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கூறினர். இதை வலியுறுத்தி கடந்த 16 நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை தொடங்கியது.
கூடுத்ல் தொழிலாளர்கள்:
அதன் பிறகு தொழிலாளர்கள் சங்கத்துடன் இந்தியன் ஆயில் அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 72 தொழிலாளர்களுடன் மேலும் 4 தொழிலாளர்களை கூடுதலாக நியமிக்க இந்தியன் ஆயில் அதிகாரிகள் ஒப்புகொண்டனர். ஆனால் 80 தொழிலாளர்கள் வேண்டும் என கூறி தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு:
இதனால் இனாம் குளத்தூர் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் மையத்தில் இருந்து கியாஸ் ஏஜென்சிகளுக்கு லாரிகளில் சிலிண்டர்கள் கொண்டு செல்லும் பணி முடங்கியது. இதனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, திண்டுக்கல், மதுரை உள்பட 14 மாவட்டங்களில் உள்ள இண்டேன் கியாஸ் ஏஜென்சிகளுக்கு சிலிண்டர்கள் அனுப்பப்படவில்லை. அங்கு பதிவு செய்துவிட்டு 30 நாட்களுக்கு மேல் சிலிண்டர்கள் வராமல் பொதுமக்கள் காத்து இருக்கிறார்கள்.
பிரச்சினை முடியுமா?
14 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் கியாஸ் சிலிண்டர் தட்டுபாடு கடுமையாக நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க சென்னையில் இன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் இனாம்குளத்தூர் இந்தியன் ஆயில் எம்பிளாயிஸ் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் ஏற்படும் முடிவை பொறுத்து சிலிண்டர் பிரச்சினை முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிக தீர்வு:
இதற்கிடையே கடும் தட்டுப்பாட்டை போக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சேலம் மாவட்டம் கருப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோவை மாவட்டம் கிணத்துகடவு, திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை, சிவகங்கை மாவட்டம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள கியாஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் இருந்து சிலிண்டர்கள் பாதிப்பு உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.