தென்சூடான் போராளிகள் தாக்குதலில் 5 இந்திய ராணுவத்தினர் பலி
டெல்லி: தென் சூடானில் போராளிகளின் தாக்குதலில் 5 இந்திய ராணுவத்தினர் பலியாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தென்சூடான் சுதந்திர நாடாக உருவெடுத்தது. அதன் பின்னரும் தொடர்ந்தும் அங்கு இன மோதல் நீடித்து வருகிறது. தென் சூடான் அரசுக்கு எதிராக டேவிட் யாயு யாயு தலைமையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைதிப் படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைதிப் படையில் 2000 இந்திய ராணுவத்தினரும் அமைதிப் படையினராக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகன தொடரணிக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த போது போராளிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவத்தினர் பலியாகி இருக்கின்றனர். ஜோங்லே என்ற இடத்தில் இத்தாக்குதல் நடந்ததாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதீன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் தென்சூடானில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்தார்.