துணைத் தூதருக்கு விசா வழங்க இந்தியா தாமதம்: இலங்கை குற்றச்சாட்டு
கொழும்பு: இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு இந்திய அரசு விசா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியாக ஏ.சபருல்லா கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விசா வழங்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசா மனு ஏற்கப்பட்டதா, இல்லையா என்பதை இதுவரை இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இதனால், சபருல்லா கான் துணைத் தூதராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற தாமதம் ஏற்பட்டதில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செயலாளர் கே.அமுனுகமா கூறுகையில், "இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.