முல்லை பெரியாறு அணை விவகாரம்: ஜூலை 23ம் தேதி இறுதி விசாரனை
அணையின் உறுதித்தன்மை சரியில்லை, அணை பலவீனமாக உள்ளது, உடைந்தால் பேராபத்து என்று கேரள அரசு பிரச்சினை கிளப்பியதையடுத்து அதை மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
119 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136-ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்தது.
இந்த ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, சி.கே. பிரசாத், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரளா அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் ஜூலை 23ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.