கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்: கட்டு கட்டாக பணம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், கல்வராயன்மலையில் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் சோப்பு, பல்பொடி, எண்ணெய் போன்றவற்றுக்கான பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும். இந்நிலையில் இந்த பில் தொகையை வழங்க தனி தாசில்தார் உள்பட சில பணியாளர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு சென்று திடீர் என்று சோதனை நடத்தினர். அப்போது கட்டு கட்டாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் ரொக்கம் சிக்கியது. இது குறித்து தனி தாசில்தார், அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த 3 தலைமை ஆசிரியைகளிடம் இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது. அவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.