தலை ஒட்டிய ‘மாற்றான்’ சகோதரிகளின் மருத்துவ செலவை பீகார் அரசு ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஒட்டிப்பிறந்த சகோதரிகளின் மருத்துவச் செலவை பீகார் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சகோதரிகள் சபா (15), பரா (15) இவர்கள் இருவரும் தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்களை தனித் தனியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இது பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட் எடுத்து கொண்டது. இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட் சகோதரிகளை தனியாக பிரித்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
பரிசோதனை:
அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஆஸ்பத்திரியின் நரம்பியல் மருத்துவர்கள் குழு பாட்னா சென்று தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகளை பரிசோதனை செய்தனர். இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவரையும் பிரித்தால் அவர்களில் ஒருவர் உயிரிழப்பது நிச்சயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை சிறுநீரகம்:
சகோதரிகளின் உடல் 2 ஆக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்குதான் சிறுநீரகம் உள்ளது. மேலும், இருவரது மூளைக்கும் பொதுவான ஒரே ஒரு பெரிய ரத்தக் குழாய் மட்டுமே செல்கிறது. எனவே, இவர்களை பிரித்தால் ஒருவர் நிச்சயம் உயிரிழப்பார்.
கவலைக்கிடம் தான்:
அதே நேரத்தில், உயிர் பிழைப்பவரின் நிலைமையும் கவலைக்கிடமாகும். எனவே, அவர்களை தனியாக பிரிப்பது சரியல்ல. மேலும், இதற்கு அவர்களது பெற்றோரும், சகோதரரும் ஒப்புக் கொள்ளவில்லை.
கோரிக்கை:
மாறாக இவர்களின் உடல் நலனை பராமரிக்க பீகார் அரசு மாதந்தோறும் உதவி தொகை வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரியுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்க உத்தரவு:
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் சகோதரிகள் சபா மற்றும் பராவை பராமரிக்கும் செலவை பீகார் மாநில அரசு ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சகோதரிக்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவையும், தினமும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையும் பீகார் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிதி செலைவை பீகார் அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மருத்துவக்கல்லூரிக்கும் உத்தரவு:
பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சகோதரிகள் சபா மற்றும் பராவை தினமும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பீகார் அரசு மீது அதிருப்தி:
சகோதரிகள் சபா மற்றும் பாரா படுத்த படுக்கையாகவே உள்ளனர். கடும் வலி மற்றும் வருமையால் வாடி வருகின்றனர். அவர்களால் தூங்கவும் முடியவில்லை. படுக்கவும் முடியாமல் இருந்து எழுந்து நிற்கவும் முடியாமல் மிகவும் துன்ப பட்டு வருகின்றனராம். முன்னதாக, இவ்விவகாரத்தின் பீகார் அரசின் செயல்பாடு மீதான அதிருப்தியை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.