தேனி அருகே கோவில் திருவிழாவில் மோதல்: தடுக்க வந்த போலீசுக்கும் காயம்
பெரியகுளம்: தேனி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கல்வீசி தாக்கியதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இங்கு நேற்று இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது நண்பர்களுடன் கச்சேரியை பார்த்து விட்டு நள்ளிரவில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களை வழிமறித்த வடுகப்பட்டியை சேர்ந்த விக்னேஷ், முனியசாமி, சிவா உள்பட 10 பேர் கண்ணனிடம் கோவில் திருவிழாவுக்கு எப்படி வரலாம் என தகராறு செய்துள்ளனர்..
தகராறு முற்றியதில் 10 பேரும் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அவர்களது நண்பர்களையும் வெட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த கண்ணனின் உறவினர்கள் விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிருக்கு பேராடிக்கொண்டிருந்த கண்ணனை மீட்க முயன்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த விக்னேஷ் தரப்பினர் ஆம்புலன்ஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் உடைந்தன. ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணனின் ஆதரவாளர்கள் விக்னேஷ் தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் அப்பகுதி கலவரம் போல காட்சி அளித்தது. மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியகுளம் இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டி, தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வித்யா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது போலீசார் மீதும் கல் வீசப்பட்டது.
இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வித்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கண்ணனையும், சப்-இன்ஸ்பெக்டர் வித்யாவையும் போலீசார் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்வம் குறித்து தென்கரை போலீசார் இருதரப்பை சேர்ந்த விக்னேஷ், முனியசாமி, சிவா, முருகன், அழகர்ராஜா, முருகப்பாண்டி, முத்துப்பாண்டி, செல்வகணேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விக்னேஷ், முனியசாமி கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீஸ் சூப்பிரண்டு பிரவின்குமார் அபிநபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications