திமுகவை விட பெரிய எதிரி அதிமுக- எம்.ஜி.ஆரை விரும்பாத காமராஜர்: விக்கிலீக்ஸ்
சென்னை: 1975ல் அண்ணா திமுகவின் எம்.எல்.ஏ ஒருவரை அமெரிக்காவின் ஏஜெண்டு ஒருவர் ரகசியமாக சந்திக்கிறார் என்று காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸின் ஏடான நவசக்தி வெளியிட்ட பரபரப்பான கட்டுரையையும் மொழியாக்கம் செய்து அமெரிக்காவுக்கு சென்னையில் உள்ள தூதரகம் அனுப்பி வைத்த ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதில் எம்.ஜி.ஆரை., அதிமுகவை காமராஜர் விரும்பவில்லை, பெரிய எதிரியாக பார்த்தார் என்ற தகவலையும் பதிவு செய்திருக்கிறது.
நவசக்தி கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாக அமெரிக்க தூதரக ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு:
ஸ்தாபன காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நாளேடான நவசக்தி (40 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகக் கூடியது) 7 கால தலைப்பில் தலைப்புச் செய்தியாக "அமெரிக்க ஏஜெண்ட்- அதிமுக எம்.எல்.ஏ. நட்சத்திர ஹோட்டலில் ரகசிய சந்திப்பு" என டிசம்பர் 31-ந் தேதி பதிப்பில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
செய்தி வெளியானது ஏன்?
டிசம்பர் மாத மத்தியில் காங்கிரஸ்(ஆர்), ஸ்தாபன காங்கிரஸ் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியவை இணைந்து ஒரு கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை விரும்பியது. இருப்பினும் ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ், திமுகவை விட மிகப் பெரிய எதிரியாக அதிமுகவை பார்த்தார்.
எம்ஜிஆரை காமராஜர் விரும்பவில்லை
எம்.ஜி.ஆரை காமராஜர் விரும்பவில்லை. அவருடன் இணைந்து செயல்பட எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் அதிமுகவின் பெயரை சீர்குலைக்கும் முயற்சியாக 'அமெரிக்காவின் சிஐஏ ஏஜெண்ட்" என்று முத்திரை குத்தும் வகையில் இச்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியக் கூடியது.
எம்ஜிஆருடன் அமெரிக்கா அதிகாரிகள் சந்திப்பு
மேலும் அமெரிக்க தூதரகத்துக்கும் அதிமுகவுக்கும் இடையேயான சந்திப்பு பற்றி ஏற்கெனவே அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஜூலை 24-ந் தேதி டாக்டர் ஹெச்.வி. ஹண்டேயுடனும் ஆகஸ்ட் 23-ந் தேதி ஜி.ஆர். எட்மண்டுவுடனும் ஆகஸ்ட் 27-ந் தேதி எம்.ஜி.ஆருடனும்தான் கடந்த சில மாதங்களில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நவசக்தி செய்தி
நவசக்தி வெளியிட்டிருக்கும் செய்தியில், "எம்.ஜி.ஆரின் அதிமுகவுடன் அமெரிக்காவின் சிஐஏ மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது. இதை வலுப்படுத்தும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவரும் அமெரிக்காவின் ஏஜெண்டாக செயல்படக் கூடிய ஒருவரும் சென்னையில் மிக முக்கிய ஹோட்டல் ஒன்றில் வழக்கமாக சந்தித்துப் பேசி வருகின்றனர்.
எம்ஜிஆர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு
எம்.ஜி.ஆர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக முக்கியமான அமெரிக்க பிரமுகர்களுடன் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். அந்த இரவு நேர விருந்தில் பல ரகசிய திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமான அமெரிக்க பிரமுகர் ஒருவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவை எம்.ஜி.ஆர். விலக்கிக் கொண்டால் தேர்தல் நேரத்தில் அமெரிக்கா அதிமுகவுக்கு உதவியாக இருக்கும் . தேர்தல் செலவுகளை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜிஆருக்கு அரசு மரியாதை
மேலும் அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர். செல்லும் போது அரசு முறையிலான மரியாதை அளிக்கப்படும் என்றும் எம்ஜிஆரிடம் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு எம்.ஜி.ஆர்., வலது கம்யூனிஸ்ட் கட்சியுடன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) உறவை உடனே துண்டித்துக் கொள்ள முடியாது. ஆனால் படிப்படியாக தாம் அதைச் செய்கிறேன் எனக் கூறியுள்ளார். அதுவும் அமெரிக்காவில் நல்ல முறையில் தாம் வரவேற்கப்பட்டால்தான் இதையும் செய்வேன் என்றும் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார்.
அண்ணாயிசம் என்றால் என்ன...
எம்.ஜி.ஆர். தாம் முன்வைத்த அண்ணாயிசம் என்பது கேப்பிடலிசம்,சோசியலிசம் மற்றும் கம்யூனிஸம் ஆகியவற்றின் கலவை என்றும் அமெரிக்காவில் கூறியிருக்கிறார் என கூறப்பட்டுள்ளது என்கிறது அமெரிக்காவின் அறிக்கை