எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக பிளவுபடுவதை ஆவலோடு எதிர்பார்த்த யு.எஸ்: விக்கிலீக்ஸ்
கோயம்புத்தூரில் 1976ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுகவின் அதிருப்தியாளர்களாக இருந்த ஜி.விஸ்வநாதன்,கோவை செழியன், பி.சீனிவாசன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் கோயம்புத்தூரில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று அவர்கள் அறிவித்திருக்கின்றனர். பின்னர் சென்னையில் அக்டோபர் 24-ந் தேதியன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் கட்சி நிர்வாகிகளை இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் அறிவிப்போம் என்றும் அறிவித்திருக்கின்றனர். மேலும் பிரதமர் இந்திரா காந்தியை அதிருப்தியாளர் ஜி.விஸ்வநாதன் நேரில் சந்திக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.இது அப்போது நடைபெற்ற ஒரு சிறு சலசலப்பு.
ஆனால் அமெரிக்கா இதை எப்படிப் பார்த்திருக்கிறது எனில் அதிமுகவில் மிகப் பெரிய பிளவு ஏற்படப் போகிறது, அதிருப்தி தலைவர் பிரதமரை சந்திக்கப் போகிறார் (ALL INDIA ANNA DMK SPLITS WIDE OPEN; DISSIDENT LEADER TO SEE PRIME MINISTER) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்.
கோயம்புத்தூரில் கோவை செழியன் கூட்டிய கூட்டம் பற்றி குறிப்பிடுகையில், ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, கோயம்புத்தூர், சேலம், வட ஆர்க்காடு, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான அதிமுகவினர் கலந்து கொண்டதாக அமெரிக்க தூதரக அறிக்கை பதிவு செய்கிறது. அதிமுகவின் படித்த தொண்டர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் செல்லுலாய்டு அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் எம்.ஜி.ஆரை விட்டு வெளியேறி தனியே போட்டி அதிமுகவை அதிருப்தியாளர்கள் உருவாக்கும் போது எம்.ஜி.ஆரின் நிலை பலவீனப்படும். இது தமிழக அரசியலில் புதிய அணி சேர்க்கையை உருவாக்கும்.இருப்பினும் என்ன நடக்கப் போகும் என்பதை இப்போதே கணிப்பது கடினமானதும் கூட என்கிறது அமெரிக்காவின் ஆவணம்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற எந்த ஒரு அரசியல் நிகழ்வையும் அமெரிக்கா விட்டு வைக்காமல் அப்படி ஆராய்ந்திருக்கிறது!
ஆனால் கோவை செழியன், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கலகக் குரல் கடைசியில்பெரிய அளவில் எடுபடமால் போனது என்பதே
வரலாறு.