ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை போராடுவோம்... வைகோ
நெல்லை: "ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை எனது போராட்டம் தொடரும்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் செவ்வாய்கிழமை இரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன்தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும்வரை என் போராட்டம் தொடரும்.
இதில் என்னையும் மனுதாரராக ஏற்றுக்கொள்ளும்படி நீதிபதி சொக்கலிங்கத்திடம் வேண்டுகோள் வைத்தேன். நீண்ட காலமாக போராடிவருவதை கருத்தில் கொண்டு உங்கள் மனுவை ஏற்றுக்கொள்வதாகவும், உங்கள் மனுவை விரைந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கான பணிகளை முடித்துவிட்டு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்.
முதல்வருக்கு நன்றி
மார்ச் 23ஆம் தேதி சட்டமன்றத்தில் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரி தீர்மானம் இயற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தேன். 29ஆம் தேதி தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றிருக்கிறார். அதற்காக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தேன். நல்லது செய்தால் பாராட்டுவோம்.
திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரித்தேன், நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன். அப்போதெல்லாம் கடைகளில் புளி என்று சொல்லக்கூட பலரும் பயந்தார்கள். இன்று அனைத்து தலைவர்களும் ஆதரிப்பதுகண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் களத்தில் போராடுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ப.அ.சரவணன், எஸ்.பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.