ஜெயலலிதா ஆட்சி சுமார் தான்.. கருத்துக் கணிப்பில் மக்கள்
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த இரண்டு வருட அதிமுக ஆட்சி குறித்து விகடன் நடத்தியுள்ள சர்வேயில் வெளி வந்துள்ள தகவல்கள்...
இலவசம் வேண்டாம், மின்சாரம் வேண்டும்
இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொருட்கள் அதிகம். ஆனால் அவற்றை வீட்டில் இயக்க மின்சாரம் வேண்டுமே? எனவே இலவசங்கள் வேண்டாம் மின்சாரம் கொடுத்தால் போதும் என்ற அளவிற்கு வந்துவிட்டனர் மக்கள். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பற்றிய கேள்விக்கு மோசம் என்று 3,667 நபர்கள் கூறியுள்ளனர். பரவாயில்லை என்று 1,058 நபர்களும், திமுக ஆட்சியை விட மோசம் என்று 3,031 பேரும் பதிலளித்துள்ளனர்.
அமைச்சர் மாற்றம் ஆபத்து
இந்த இரண்டு வருட ஆட்சியில் இதுவரை பலமுறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. அமாவாசை வந்தாலே அமைச்சர்களுக்கு கிலிதான். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் தமிழக அமைச்சர்களை ஜெயலலிதா அடிக்கடி மாற்றி வருவது ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று 3,428 கூறியுள்ளனர். நியாயமானதுதான் என்று 2,369 பேரும், முதல்வரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று 1,959 பேரும் கூறியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சரியில்லையே..
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீராக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த இரண்டு வருடத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மிக மோசம் என்று 1,019 பேர் கூறியுள்ளனர். அதேசமயம் சுமார் என்று 4226 பேரும், மோசம் என்று 1,601 பேரும் பதிவு செய்துள்ளனர். பிரமாதம் என்று 910 பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டுதான் பிரச்சனையே
திமுக ஆட்சியை அசைத்து பார்த்தது மின்வெட்டுப் பிரச்சனைதான். மூன்று மணிநேர மின்வெட்டு பிரச்சனை இருந்த போதே ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்வெட்டு சீராகும் என்றார் ஜெயலலிதா. இதே 23 மாதங்கள் முடிந்துவிட்டது. மின்வெட்டு பிரச்சனை 16 மணி நேரமாக அதிகரித்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் உங்களை அதிகம் பாதித்தது எது என்ற கேள்விக்கு மின்வெட்டுப் பிரச்சனைதான் அதிகம் என்று 5,363 பேர் கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை 444 பேரும், பால், பஸ் மின்கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு பாதிப்பை எற்படுத்துவதாக 1,949 பேரும் கூறியுள்ளனர்.
நம்ப முடியவில்லையே…
கூடங்குளம் அணு உலையை திறந்தால் மின்வெட்டு நீங்கும் என்று நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு நம்புகிறேன் 2,898 பேர் கூறியுள்ளனர். நம்பவில்லை என்று 2,538 பேரும், அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று 2,320 பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விலை வாசி உயர்வு உச்சத்தில்
காய்கறி தொடங்கி அரிசி, பருப்பு வரை விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இந்த விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் விலை வாசி உயர்வுக்கு இருவருமேதான் காரணம் என்று 5,373 பேர் பதிலளித்துள்ளனர். மத்திய அரசு மட்டுமே காரணம் என்று 2,135 பேரும், மாநில அரசு மட்டுமே காரணம் என்று 248 பேரும் பதிலளித்துள்ளனர்.
ஜெ. ஆட்சி சுமார்தான்
ஜெயலலிதாவின் இரண்டு வருட ஆட்சி அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை சுமார்தான் என்று 4,455 பேர் கூறியுள்ளனர். மோசம் என்று 1,376 பேரும், மிக மோசம் என்று 1,135 பேரும் வாக்களித்துள்ளனர். பிரமாதம் என்று 790 பேர் கூறியுள்ளனர்.
ஒரு மாற்றம் வேண்டும் என்று ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமற வைத்தவர்களின் மனது படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளது. இன்னும் 3 வருட ஆட்சிக்காலத்தை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே உள்ளது இந்த சர்வே முடிவு.