தமிழ்நாட்டில் 100 நடமாடும் ரேசன் கடைகள்: அரசு அறிவிப்பு.. இது விஜயகாந்த் சொன்ன ஐடியா!

இன்று கேள்வி நேரத்தின் போது பவானிசாகர் தொகுதி உறுப்பினர் பி.எல்.சுந்தரம் சத்தியமங்கலம் மலை பகுதிகளில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப்படுமா? என்றும், நடமாடும் ரேசன் கடைகளில் உணவு பொருட்களில் மண்ணெண்ணை வாசனை வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேட்டார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் 26 முழுநேர கடைகள், 36 பகுதி நேர கடைகள் மூலம் அப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்த பகுதிக்கு 2 நகரும் ரேஷன் கடைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 4 நகரும் கடைகள் வழங்க மாவட்ட கலெக்டருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மலைபகுதிகளில் ரேசன் கடைகள் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் செலவினங்களை பெற்று நடமாடும் வேன் மூலம் அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வாகனங்களில் உணவு பொருட்களை கொண்டு செல்லும் போது அதில் மண்ணெண்ணை கலந்து விடுகிறது என்ற பிரச்சனை எங்கள் கவனத்துக்கு வருகிறது.
இத்தகையை சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக 10 நவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உணவு பொருட்களில் மண்ணெண்ணை கலப்பதை தடுக்கும். இந்த நவீன வாகனத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். நடமாடும் ரேசன் கடைகள் இதன் மூலம் சிறப்பாக செயல்படும்''என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
விஜயகாந்த் தேர்தல் வாக்குறுதி
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்களை வீடு வீடாக கொண்டு வந்து கொடுப்போம் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் விஜயகாந்த் கூறியிருந்தார். அதே ஐடியாவை அதிமுக ஆட்சி செயல்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications