வயோதிகத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடலையே தானமாக கொடுத்த கோவை தம்பதி
கோவை: கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாததால் உடல் தானம் செய்வதா அறிவித்துள்ளனர் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்.
கோவை சரவணம்பட்டி பூபதி நகரை சேர்ந்தவர் பெருமாள் (63). இவரது மனைவி ரங்கநாயகி (53). மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.பெருமாள், விஸ்கோஸ் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டபோது வேலை இழந்தார். தற்போது, கூலி வேலை செய்து வருகிறார்.
இவரும், இவரது மனைவி ரங்கநாயகியும் தங்களது உடலை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இதற்கான உறுதிமொழி பத்திரத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விமலா இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதுபற்றி பெருமாள் கூறுகையில், ‘‘எங்களிடம் தர்மம் செய்ய எதுவும் இல்லை. கடைசி காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்கவும் விரும்பவில்லை. மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு எங்கள் உடல் உதவியாக இருக்கட்டுமே என்ற நோக்கத்தில், நாங்கள் இருவரும் மனமுவந்து உடல்தானம் செய்துள்ளோம். உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகம் ஏற்படவில்லை. இன்னும் அதிகம் பேர் உடல் தானம் செய்ய முன்வரவேண்டும் என்பது எங்களது விருப்பம்'' என்றார்.