தேசிய அளவில் 3வது அணி குறித்து ஜெ., கருணாநிதியுடன் பேசுவேன்: எதியூரப்பா
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டுமானால், வலுவான மாநில கட்சிகள் அவசியம். தேசிய அளவிலும் மாநிலக்கட்சிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்தால்மட்டுமே மாநில நலன்களை பாதுகாக்க முடியும். மாநிலக்கட்சிகளை வலுப்படுத்த வேண்டிய வரலாற்று தேவை மலர்ந்து வருகிறது.
தேசிய அளவில் 3-ஆவது அணி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக்கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. மாநிலக்கட்சிகளின் முதல்வர்கள், தலைவர்களை சந்தித்து 3-ஆவது அணி அமைப்பது குறித்து பேசுவேன்.
குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக மாநிலக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவேன். கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சியின் சக்தியை வெளிப்படுத்திய பிறகு மே 5-ந் தேதிக்கு பிறகு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலக்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்றார்.