2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வி சமூக வலைத்தளங்களின் கையில் உள்ளது… - சர்வே
நெல்லை: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 160 தொகுதிகளுக்கான வெற்றி தோல்வியை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் நிர்ணயம் செய்யும் என்று சமீபத்திய சர்வே முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சமூக வலைத்தளங்கள், இணையதளங்களின் பங்கு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. ஆய்வில் முடிவில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160
தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வலைத்தளங்கள் இருக்கக் கூடும் என்று தெரிய வந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் 21
மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும், குஜராத்தில் 17 தொகுதிகளிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கலாம்.
தமிழ்நாட்டில் 12
தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் முறையே 12, 11 மற்றும் 10 தொகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களின் வீச்சு
அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், முக்கியப் பிரச்னைகளில் சமூக வலைத்தளங்களும் இணைய ஆர்வலர்களும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்த ஒன்றே. ரேடியோ, சேனல்கள், நாளிதழ்கள், வாரப் பத்திரிக்கைகள் என ஊடகங்களைத் தாண்டி, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இடும் வலைப் பதிவுகள் பெற்று வரும் முக்கியத்துவம் பிரம்மிக்க வைக்கிறது.
அண்ணா ஹசாரே போராட்டம்
அண்ணா ஹசாரே போராட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை, டெல்லி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கவனத்தை ஈர்த்ததற்கு சமூக வலைத்தளப் பதிவர்களே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை
தமிழகத்தில் தமிழீழத்துக்கு ஆதரவான மாணவர் போராட்டம் பெற்ற வெற்றியின் பின்னணியிலும் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. "தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை வலைத்தளங்கள் தீர்மானிக்கப் போகின்றன என்று ஆய்வு கூறுகிறது.