ஸ்டீல் ரவி கொலை…. ரவுடிகள் லிஸ்ட்டை சேகரிக்கும் போலீஸ்
கோவை: ஈரோட்டில் படுகொலை செய்யப்பட்ட ஸ்டீல் ரவி கொலையில் தொடர்புடைய ரவுடிகளை தேடும் பணியை கோவை மாவட்ட போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளி விரைவில் சரணடைவார் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஈரோடு பகுதியில் தாதாவாக செயல்பட்டு வந்தவர் ஸ்டீல் ரவி. பல்வேறு கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த ஸ்டீல் ரவி கடந்த 14-ந்தேதி ஈரோட்டில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலை நடந்த மறு நாளே ஈரோடு சூரம்பட்டியைசேர்ந்த மோகன் ராஜ், திராவிட செல்வன், எல்லப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் அருண் பிரசாத்தை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே அருண் பிரசாத் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.
அப்போது இந்த வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த சுந்தர், ராஜ்குமார், மணி மற்றும் ஈரோட்டை சேர்ந்த பிரபல தி.மு.க. பிரமுகர் ஆகிய 4 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
இதையொட்டி 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஸ்டீல் ரவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே திருநெல்வேலியை சேர்ந்த சுந்தர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை திங்கட்கிழமையன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், அன்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்கிறார்கள். இவரிடம் விசாரணை நடத்தினால் ஸ்டீல் ரவி கொலை வழக்கில் வேறு யாரும் முக்கிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்ற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி விரைவில் சரண் அடைவார் என்று எதிர்பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரவுடிகள் லிஸ்ட் சேகரிப்பு
இதனிடையே கோவை மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் கோவையில் நேற்று ஆலோகனை கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உள்பட 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஐ.ஜி, டேவிட்சன் ஆசீர்வாதம், பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் யார்-யார்? என்று பட்டியல் தயாரிக்க வேண்டும். ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.