3 பேரின் தூக்கு தண்டனையை மாற்ற அரசு தீர்மானம் நிறைவேற்றுக: கருணாநிதி
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புல்லர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க நிலைப்பாடு.
எனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி 3 பேரையும் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் .
மேலும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி
இதேபோல் மூவரின் மரணத் தண்டனையை தமிழக அரசே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புல்லர் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத்தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லர் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்ச நீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.
எனவே அரசமைப்பு சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து, மாநில ஆளுநர் மூலமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் கி.வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.