கருணாநிதி சொன்னாரா.. ரகுமான் கான் சொன்னாரா?: அமைச்சருடன் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
சென்னை: சட்டசபையில் சத்துணவு திட்டத்தை கருணாநிதி பிச்சைக்காரர்கள் திட்டம் என கூறியதாக அமைச்சர் வைத்தியலிங்கம் கூறிய புகார் தவறானது என்று கூறியும், அதற்கு பதில் அளிக்க தங்களுக்கு வாய்ப்பு தரப்படாததை கண்டித்தும் தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் செய்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
சமூக நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 3ம் தேதி சட்டசபையில் நடந்தது. அப்போது சத்துணவுத் திட்டத்தை பிச்சைக்காரர்கள் திட்டம் என்று திமுக தலைவர் கருணாநிதி கொச்சைப்படுத்தியதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
அதை ஸ்டாலின் மறுத்ததுடன், அமைச்சர் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம், "கருணாநிதி பேசியது அவைக் குறிப்பில் இருக்கிறது. அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கிறேன்' என்றார்.
இந் நிலையில் நேற்று மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பினார் ஸ்டாலின். அவர் கூறுகையில், அமைச்சர் வைத்திலிங்கம் ஆதாரத்துடன் கூடிய விளக்கத்தைத் தருவார் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். ஆனால் விளக்கம் தரவில்லை. அதனால் மீண்டும் அவைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் ஸ்டாலின்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் வைத்திலிங்கம் அவைக் குறிப்பு புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்தார். அதில், 1983ம் ஆண்டு சபையில் திமுக உறுப்பினர் ரகுமான்கான் பேசும்போது, சத்துணவுத் திட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாழாகியிருக்கிறது. குழந்தைகள் பிச்சைக்காரர்களாக ஆக்கப்படக் கூடிய சூழல் இருக்கிறது.
ஆசிரியர்கள் சமையல்காரர்களாக ஆக்கப்படுகின்றனர். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்பர், அந்த இறைவன் இப்போது முருங்கைக் கீரையை உருவுகிறார் என்று பேசியுள்ளார். திமுகவின் சார்பாகத்தான் ரகுமான்கான் பேசினார். அதனை நீக்கும்படி திமுக சார்பில் அப்போது கூறப்படவில்லை. அதனால் திமுகவின் கருத்துதான் அது என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.
இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் தனபால், அமைச்சர் பேசியதற்கு ஆதாரம் கேட்டீர்கள். அவர் ஆதாரம் கொடுத்துவிட்டார். அதனால் இதற்குமேல் இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்றார்.
ஆனால் திமுக உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லை. கருணாநிதி பேசியதாக சொன்னதற்கான ஆதாரம் எங்கே?. கருணாநிதி பேசியதாகக் கூறிவிட்டு, இப்போது ரகுமான்கான் கூறியதாக அமைச்சர் கூறுகிறார். இதை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது அமைச்சர் வைத்திலிங்கம், ரகுமான்கான் கூறியது திமுகவின் கருத்து. அது கருணாநிதியின் கருத்தும் என்றுதான் கூறினேன் என்றார்.
ஆனால் மு.க.ஸ்டாலின், அமைச்சர் வைத்திலிங்கம் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுத்தான் பேசினார். எனவே அமைச்சர் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதை சபாநாயகர் ஏற்க மறுக்கவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிகவும்...
இந்த விவாரத்துக்குப் பிறகு சட்டப் பேரவை நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முதலில் திமுக உறுப்பினர் சுப.தங்கவேலனை பேசுவதற்கு சபாநாயகர் முதலில் அழைத்தார்.
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்க்கட்சி என்ற முறையில் தங்களுக்குத்தான் முதலில் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி தரவில்லை.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தேமுதிக உறுப்பினர்களுக்கு முதலில் பேசுவதற்கு வாய்ப்பு தந்தால், பேசிவிட்டு வெளியில் சென்று விடுகின்றனர். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் பேசுவதைக் கவனிப்பதில்லை. பேரவையில் முழுமையாகப் பேசிவிட்டு, பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்கின்றனர். அல்லது வெளியேற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துகின்றனர். இதனாலேயே தேமுதிக உறுப்பினர்கள் இறுதியாகப் பேச அழைப்படுகின்றனர்.
செளந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): தேமுதிக உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சபாநாயகர் தனபால்: பேரவையில் யாரை, எப்போது பேச அழைக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமையாகும். இதில் யாரும் தலையிட முடியாது என்றார்.
ஆனாலும் தேமுதிக எம்எல்ஏக்கள் தங்களை முதலில் பேச அழைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு அனுமதி கிடைக்காததையடுத்து, உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதே பிரச்சனை.. திமுக இன்றும் வெளிநடப்பு..
இந் நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி எழுந்து ஒரு பிரச்சனையை எழுப்ப முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. நேற்றே உங்களுக்கு எனது முடிவை சொல்லி விட்டேன். அதற்கு மேல் விவாதம் செய்ய முடியாது என்றார்.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், திமுக எம்.எல்..க்கள் நேற்று சில பிரச்சனைகளை எழுப்பி, சபாநாயகர் தீர்ப்பு வழங்கியபிறகு வெளிநடப்பும் செய்து விட்டார்கள். அந்த பிரச்சனைக்கு இன்று விவாதம் நடத்த முடியாது என்றார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர். ஆனால் சபாநாயகர் அனுமதி தரவில்லை.
நேற்று வெளிநடப்பு செய்து சென்றபிறகு இன்று பிரச்சனையை கிளப்புவது நியாயம் இல்லை. இருக்கையில் அமருங்கள் என்றார் சபாநாயகர்.
இதை ஏற்க மறுத்த திமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.