சவூதி: அழகாக இருந்ததால் கலாச்சார விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 அமீரக ஆண்கள்!
ரியாத்: ரியாத்தில் நடந்த கலாச்சார திருவிழாவின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.
சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா நடந்தது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு பிரதிநிதிகள் நிறுத்தப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் ஐக்கிய அரபு அமீரக கூடாரத்திற்கு வந்து செய்த செயல் சவூதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கலைஞரைப் பார்த்து வந்த போலீஸ்காரர்
ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் பெண் கலைஞர் ஒருவர் நின்றதைப் பார்த்து அங்கு மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் ஒருவர் வந்தார். உடனே அங்கிருந்த தேசிய பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். அந்த பெண் கலைஞர் தற்செயலாக வந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
அழகாக இருப்பது ஒரு குற்றமா?
ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் வந்து அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றினர். அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்தார்களாம்.
3 பேரை அபுதாபிக்கு அனுப்ப ஏற்பாடு
அமீரக பிரதிநிதிகள் 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களைப் பார்த்து பெண்கள் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.