பாக். சிறையில் சரப்ஜித்சிங் மீது திடீர் தாக்குதல்- சதி என உறவினர்கள் புகார்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் எனக் கூறி அவர் தாக்கல் செய்த ஐந்து கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.பல காரணங்களால் அவருடைய தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. கடந்த 22 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சரப்ஜித் சிங்கை சிறை அதிகாரிகள் வேறு ஒரு அறைக்கு மாற்றும்போது சக கைதிகள் சிலர் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். கற்கள் மற்றும் தட்டுகளால் சரப்ஜித்சிங்கை அவர்கள் தாக்கியிருக்கின்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சப்ரஜித் சிங் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை மிக மோசமாக இருந்ததையடுத்து சிறை மருத்துவர்களின் அறிவுரைப்படி ஜின்னா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
4000 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக்கூடிய கோட் லக்பத் சிறைச்சாலையில் 17 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகளுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, கடந்த பிப்ரவரி மாதம் தில்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டதையடுத்து சரப்ஜித் சிங்குக்கு சக கைதிகளால் அடிக்கடி மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் பேசிய சரப்ஜித்சிங்கின் சகோதரி, மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்றிருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது. நான் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை சந்தித்த போது சரப்ஜித் சிங்குக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பற்றி விவரித்திருந்தோம்.. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று குமுறியுள்ளார்.