3 கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்த கன்னட நடிகர் தர்ஷன்
பெங்களூர்: கன்னட நடிகர் தர்ஷன் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷனை நீங்கள் மறந்திருக்க முடியாது. மனைவியை தாக்கி பின்னர் கன்னட நடிகர் அம்பரீஷ் வந்து பஞ்சாயம் செய்து வைத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தர்ஷன் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்.
நடிகர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் தர்ஷன் ரொம்பவே வித்தியாசமாக உள்ளார்.
ஒரே ஆள் 3 கட்சிக்கு பிரச்சாரம்
தர்ஷன் கடந்த வாரம் மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளர் அம்பரீஷையும், தார்வாட்டில் காங்கிரஸைச் சேர்ந்த வினய் குல்கர்னியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தர்ஷன் காங்கிரஸ் ஆதரவாளர் போன்று என்று நினைக்கையில் கிட்டூரில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் ஆனந்த் அப்புகோலுக்கு வாக்கு சேகரித்தார். இவர் காங்கிரஸா, ஜேடிஎஸ்ஸா என்று மக்கள் குழம்பியபோது மகாதேவபுராவில் பாஜக வேட்பாளர் அரவிந்த் லிம்பாவலியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கடைசியில் தர்ஷன் எந்த கட்சி என்று புரியாமல் மக்கள் குழம்பிவிட்டனர்.
என்ன தர்ஷன் இது?
என்ன தர்ஷன் இது என்று கேட்டதற்கு, அரவிந்த் தியேட்டர்களில் எனது பட கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்பார், வினய் எனது பண்ணைக்கு மாடுகளை சப்ளை செய்த நண்பர், ஆனந்த் கடந்த சில ஆண்டுகளில் எனது நெருங்கிய நண்பராகிவிட்டார் என்றார். அம்பரீஷ் தர்ஷனின் காட்பாதர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் வேட்பாளர்களுக்கு நிதி
பயோகான் சேர்மன் கிரண் மசும்தார் தலைமையில் பெங்களூர் அரசியல் நடவடிக்கை குழு(பிபிஏசி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பெங்களூர் மக்களிடம் இருந்து ரூ.1 கோடி நிதி வசூலித்துள்ளது. இந்த நிதி பெங்களூரில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு தொகுதியில் 2 பேர் போட்டியிட்டால் அவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், ஒருவர் என்றால் அவருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது. வேடாபளர்களிடம் பெங்களூர் பிரச்சனைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் திருப்திகரமாக பதில் அளித்த 14 பேரின் தேர்தல் செலவுக்கு தான் மக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி வழங்கப்படுகிறது.