இலங்கை மனித உரிமை மீறல்கள்: நாளை புதிய அறிக்கை வெளியிடும் அம்னஸ்டி இன்டர்நேஷனல்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தற்போதும் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அது புதிய அறிக்கை ஒன்றை நாளை லண்டனில் வெளியிடுகிறது. இந்த அறிக்கை இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடந்த போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்களை அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய அறிக்கையை வெளியிடுகிறது.
அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மாயமாவது, ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் தாக்கப்பட்டு வருவது, அந்நாட்டு நீதிபதிகளுக்கு விடுக்கப்ட்ட மிரட்டல்கள், பிபிசி நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது சேவை துண்டிக்கப்பட்டது, மகளிர் தொண்டு அமைப்பினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்த தகவல்கள் புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.