மதுவால் தான் குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்: வைகோ
ஈரோடு: மதுவினால்தான் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றன. மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மதுவை ஒழிக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுவினால் ஏற்படும் தீமையை வலியுறுத்தி வைகோ மூன்றாவது கட்ட நடைபயணத்தை பொள்ளாச்சியில் தொடங்கினார். 13 நாட்கள் நடந்து நேற்று இரவு ஈரோட்டில் தனது பயணத்தை முடித்துக் கொண்டார்.
அங்கிருந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் வைகோ, பேசியதாவது: மதுவினால் இளைய சமுதாயம் சீரழிகிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்று கட்டங்களாக நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் என்றார்.
திமுக - அதிமுகதான் காரணம்
மதுவுக்கு காரணம் அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிள்தான்.
இந்த வருமானம் எங்கே போகிறது, மது உற்பத்தியாளர் அனைவரும் இரண்டு கட்சியினருக்கும் வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கான பங்கு தொகை இரண்டு கட்சியினருக்கும் போகிறது.
மதுவினால்தான் பாலியல் குற்றங்கள் பெருகிவருகிறது. காங்கேயம், திருப்பூரில் மதுவினால் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்து விட்டது.எனவே மதுக்கடைகளை தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று தாய்மார்கள் அனைவரும் நான் நடந்து வரும் போது கூறினர். பூரண மதுவிலக்குதான் என்னுடைய இலக்கு. விரைவில் பேராட்டக் களத்திற்கு வருவேன் என்றார் வைகோ.
குழந்தைகள் உண்ணாவிரதம்
முன்னதாக நடைபயணத்தின் போது கருங்கல்பாளையத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மாணவர்கள் குழந்தைகள் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து வைகோஇ உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அப்போது பேசிய வைகோ, இந்தக் குழந்தைகளுக்காகவாவது மதுக்கடைகளை மூடுங்கள். தமிழகத்தில் சராசரியாக 1 கோடி பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் நான் நடக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். மாணவச் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வரும் வழியெங்கும் மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகிறேன். அப்போது பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு மதுவை ஒழிக்க வேண்டும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். அதற்காகவாவது தமிழகத்தில் மதுக்கடைகளை பூட்ட வேண்டும்.
வீட்டில் உங்கள் தந்தை மதுப்பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களைத் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் மதுப்பழக்கத்தை விட்டுவிட மாட்டார்கள். மதுக்கடைகளை அடைத்தால் ஒழிய, இந்தப் பழக்கத்தை விட முடியாது என்றார்.
இந்த நடைபயணத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் செல்வராகவன், பா.ஆ.சரவணன், எஸ்.பெருமாள், ஆர்.ஆர். மோகன்குமார், ஆர்.டி.மாரியப்பன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநில தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.