கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுமி பலி... தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!
இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகில் உள்ள சூரிபாளி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 7 வயது சிறுமி, 15 மணி நேர முயற்சிக்கு பின்பு மீட்கப்பட்டார்.
ஆனால், போதிய சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறாள். இந்த செய்தி கேட்டதும் பேரதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது ஆண்டுதோறும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை குழந்தைகள் இறக்கும் போதும் அதிரடியாக சில நடவடிக்கை எடுப்பதும், அதன் பின்பு, கண்டும் காணாமல் இருந்து விடுவதும் அரசின் வழக்கமாகி விட்டது.
ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது கடை பிடிப்பதற்கான விதிமுறைகளை வகுத்து, அவை உறுதியாக கடைபிடிக்கப்படும் சூழலை உருவாக்க தமிழக அரசு தவறிவிட்டது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் ஆகும்.
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் விஷயத்தில் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கிறார்கள்.
தரையிலிருந்து 12 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டிருந்த நிலையில், முறையாக திட்டம் வகுத்து செயல்பட்டிருந்தால் எளிதாக மீட்டிருக்க முடியும். திருச்சி அல்லது பெங்களூரிலிருந்தோ ராணுவத்தினரை ஹெலிகாப்டர் மூலம் வரவழைத்திருந்தால் சில மணி நேரங்களில் சிறுமியை மீட்டிருக்க முடியும்.
மராட்டிய மாநிலம் சீரடியில் கடந்த ஆண்டு 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுவனை காவல்துறையினரும்,பொது மக்களும் முறையாக திட்டமிட்டு மீட்டனர்.
ஆனால், கரூரில் முறையான திட்டமிடல் இல்லாததாலும், தவறான அறிவுரைகளின் அடிப்படையில், நிரூபிக்கப்படாதமீட்பு முறைகளை பயன்படுத்தியதே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
சிறுமியை இழந்து வாடும் அவளது பெற்றோருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.