நெல்லை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் மருத்துவ குணம் கொண்ட பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. இதனால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இந்நிலையில பனை மரங்களில் இருநது எடுக்கப்படும் பதநீர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பதநீர் குடிப்பதால் கோடை கால நோய்கள் நெருங்காது. உடல் சூடு தணிந்து குளிர்ச்சி கிடைக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
களக்காடு பகுதியில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பதநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. பனை தொழிலாளர்கள் அதிகாலையில் பனை மரங்களில் ஏறி ஏற்கனவே கட்டியுள்ள கலசங்களில் இருந்து பதநீரை இறக்குகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ ரூ.50 க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். பின்னர் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து தெருத்தெருவாக பதநீரை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் மோர், இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறுகள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இப்போதே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தும் போது அக்னி நட்சத்திர காலத்தில் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். கடும் வெயிலின் காரணமாக பகல் பொழுதில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.