சரப்ஜித் சிங்குக்கு வெளிநாட்டில் சிகிச்சை இல்லை...பாக். திடீர் முடிவு
லாகூர்: பாகிஸ்தான் சிறையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்குப் போராடி வரும் இந்தியரான சரப்ஜித் சிங்குக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என்ற முடிவை பாகிஸ்தான் திடீரென கைவிட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் 1990ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தூக்கு தண்டனை 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட் லக்பதக் சிறையில் சரப்ஜித்சிங்கை 6 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாக கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் ஆழ்ந்த கோமா நிலைக்குப் போன சரப்ஜித் சிங் உயிருக்குப் போராடி வருகிறார். அவரைப் பார்க்க இந்தியாவில் இருந்து உறவினர்கள் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் சரப்ஜித்சிங்குக்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ கூடுதல் சிகிச்சைஅளிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் பாகிஸ்தானின் 4 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் திடீரென, சரப்ஜித்சிங்கை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை.. பாகிஸ்தானிலேயே போதுமான சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்து அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.