10ம் வகுப்புத் தேர்வை புறக்கணித்து சுற்றுச்சூழலுக்காக ஜனாதிபதியிடம் விருது பெற்ற திண்டுக்கல் மாணவி

டாடா நிறுவனம நடத்திய தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 150 நகரங்களைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மொழி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நடந்த போட்டியில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் கீழ் திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா 2-ம் இடம் பெற்றார். டெல்லியில் நடந்த விழாவில் தேசிய அளவில் தேர்வான மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மினி லேப்டாப், பரிசு கேடயம், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.
ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற மாணவி ஐஸ்வர்யாவை கலெக்டர் வெங்கடாசலம் பாராட்டினார். ஜனாதிபதி பரிசுபெறும் நாள் முடிவு செய்யப்பட்ட அன்று ஐஸ்வர்யாவுக்கு 10-ம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு நடந்தது. பரிசு வழங்கும் தேதியில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் பொது தேர்வை எழுதாமல் மாணவி ஐஸ்வர்யா ஜனாதிபதியிடம் பரிசு பெறச் சென்றார்.
இதுகுறித்து மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், 'இந்த ஆண்டே சிறப்புத்தேர்வு எழுதி பிளஸ்1 சேர்ந்து விடுவேன். இதனால் கல்வி ஆண்டு வீணாகாது. ஜனாதிபதியிடம் பரிசு என்பது வேறு நாட்களில் கிடைக்காது என்பதால் நேரில் பரிசு பெற சென்றேன். ஜனாதிபதியிடம் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications