ஒடிசா: கிராமத்தில் புகுந்து 8 பேரை கடித்து கொன்ற கரடி
புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமத்தில் புகுந்து கரடி ஒன்று 8 பேரை கடித்து கொன்றதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஒடிசா மாநிலம் கோரா புட் பகுதியில் உள்ள தவரங்காபூர் கிராமம் வனப்பகுதியையொட்டியது. இந்த கிராமத்தில் திடீரென காட்டு கரடி ஒன்று புகுந்தது. கிராம மக்களின் தோட்டத்துக்குள் புகுந்த அந்த கரடி பயிர்களை சேதப்படுத்தியது. பின் தடுக்க முற்பட்ட கிராம மக்களையும் தாக்கி கொன்றது.
இதில், 8 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் பெண்கள். மேலும் 10 பேரை கடித்து காயப்படுத்தியது. ஆட்களை அடித்துக் கொன்ற கரடி பிணத்தை இழுத்துச் சென்று அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடித்து குதறி தின்றதால், பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
மக்கள் கும்பலாக திரண்டு கொலை வெறி பிடித்த கரடியை வேட்டையாடி கொன்றனர். கரடி அட்டக்காசத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்து உள்ளது.