நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: தா. பாண்டியன் விருப்பம்
ஈரோடு: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜனநாயக நாடான இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என பெயர் எடுத்துள்ளது. நிலக்கரி ஊழல் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழங்கிய ரகசிய வாக்குமூலத்தை மத்திய அமைச்சர்கள் திருத்தியதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும். அதே போல பாஜகவும் வெற்றி பெறாது. மாநில கட்சிகள், ஜனநாயக கட்சிகளுடன், இடது சாரிகள் அமைக்கும் கூட்டணிக்கே அதிக அளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ரீதியாக, மக்களின் ஆதரவை பெற்ற அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கும் என்றார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதது குறிப்பிடத்தக்கது.