சர்ச்சையில் புதிய சட்ட அமைச்சர் கபில்சிபலும்.. வோடஃபோனுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார்!!
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் தலையிட்டு மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனிகுமார் பறிகொடுத்தார்.. அவருக்குப் பதிலாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக சட்ட அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அவரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஒரு சில அமைச்சகங்கள் ராசியில்லாதவை என்றே கருதப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சரவை மாற்றத்தின் போதும் இப்படியாக சில ஆரூடங்கள் சொல்லப்படும்.. இதேபோல்தானா மத்திய சட்ட அமைச்சகமும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஸ்வனிகுமார் சர்ச்சை என்ன?
சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனிகுமார், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் தலையிட்டு சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய வரைவு அறிக்கையில் முக்கிய பகுதிகளை நீக்கிவிட்டார் என்பது புகார். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. உச்சமாக உச்சநீதிமன்றமே செம காட்டு காட்டியது. இதனால் வேறுவழியின்றி அஸ்வனிகுமார் ராஜினாமா செய்தார்.
கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பு
இதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக சட்ட அமைச்சகம் கொடுக்கப்பட்டது.
முதல் நாளிலேயே சர்ச்சை
தாம் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சட்ட நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது. அதனால், வோடஃபோன் விவகாரத்தில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று கூறியதே சர்ச்சையாகிவிட்டது.
வோடாஃபோன் விவகாரம்
இந்த சர்ச்சை பற்றி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், வோடஃபோன் என்ற பெயரில் இந்தியாவில் தொலைத் தொடர்பு வர்த்தகம் செய்து வரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம், ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்தின் 67%பங்குகளை சுமார் ரூ. 56 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது. 2007-இல் வெளிநாட்டில் நடைபெற்ற இந்தப் பேரத்துக்கு இந்தியாவில் உள்ள வருமான வரித் துறை ரூ. 11,217 கோடி வரி விதித்தது என்றார்.
இதில் சர்ச்சை என்ன?
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் செய்து கொள்ள வோடஃபோன் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ஆனால், அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் இந்த யோசனையை சட்டவிரோதமானது என்று கூறி நிராகரித்தார். ஆனால் தற்போதைய சட்ட அமைச்சரான கபில்சிபல், வோடஃபோன் விருப்பத்துக்கு ஏற்ப நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருக்கிறார் என்பதுதான் அர்விந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு.
வோடஃபோனுக்கும் கபில்சிபலுக்கும் என்ன லிங்க்?
தற்போது சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற கபில் சிபல் வோடஃபோன் நிறுவனத்தின் பல்வேறு வழக்குகளில் கபில் சிபலின் மகனும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான அமித் சிபல் 2007-2009 ஆண்டு வரை ஆஜராகியுள்ளார். இதனால் கபில்சிபல் வோடஃபோன் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் இதன் மூலம் ரூ2 ஆயிரம் கோடி வரை கபில்சிபல் குடும்பத்துக்கு கிடைக்கும் என்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்..
கபில்சிபல் மகன் மறுப்பு
ஆனால் கபில்சிபலின் மகன் அமித் சிபலோ, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் வோடாஃபோன் நிறுவனத்துக்காக நீதிமன்றங்களில் ஆஜராவதையும், ஆலோசனை வழங்குவதையும் தவிர்த்து விட்டேன். எனது தந்தை கபில் சிபல் 2010-ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பிலும் நான் ஆஜராவது கிடையாது. இதைப் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் பூஷண் நன்கு அறிந்திருந்தும் என் மீது அவதூறு பரப்பப்படுகிறது என்கிறார்..
இந்த விவகாரம் எப்படி வெடிக்குமோ?