ஹைட்ரோசெப்லஸ் குழந்தையின் தலை ஆபரேஷன் மூலம் 30 செ,மீ குறைந்தது
டெல்லி: ஹைட்ரோசெப்லஸ்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தலை 94 செமீ ஆனதைத் தொடர்ந்து, அவளைக் காப்பாற்றும் முயற்சியாக நடைபெற்ற முதல்கட்ட ஆபரேசன் வெற்றி பெற்றது.
ரூனா பேகம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பிறக்கும் போதே மண்டை ஓட்டின் உள்புறம் மூளை அமைந்துள்ள பகுதியில் திரவம் கோர்த்துக் கொண்டதால் தலையின் அளவு சராசரி அளவை விட இருமடங்கு பெரிதாக இருந்தது.
டாக்டர்களின் அறிவுரையின் படி, அவளுக்கு உடனடியாக ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அது தற்போது வெற்றி பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூனா பேகம்...
திரிபுரா மாநிலம், அகர்தலா அருகே உள்ள ஜிராணியா கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான். கூலி வேலை செய்யும் இவரது மனைவிக்கு 18 மாதங்களுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தைதான் ரூனா பேகம்.
ஹைட்ரோசெப்லஸ்...
ரூனா பேகம் பிறக்கும் போதே மண்டை ஓட்டின் உள்புறம் மூளை அமைந்துள்ள பகுதியில் திரவம் கோர்த்துக் கொண்டதால் தலையின் அளவு சராசரி அளவை விட இருமடங்கு பெரிதாக இருந்தது. இதனை டாக்டர்கள் ஹைட்ரோசெப்லஸ் என பெயரிட்டு அழைத்தனர்.
தலை வளர்ந்தது...
ரூனா பேகத்திற்கு ஒன்றரை வயதான போது தலையின் விட்டம் 94 சென்டி மீட்டராக ஆகிவிட்டது. நாளடைவில் இந்த அளவு இன்னும் அதிகரித்துவிடும். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
தற்காலிகமாக சிகிச்சை...
குர்கானில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட ரூனா பேகத்தின் தலையில் இருந்து ஊசி மூலம் திரவத்தை டாக்டர்கள் தற்காலிகமாக வெளியேற்றினர்.
நன்கொடை திரண்டது...
குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நார்வே நாட்டு மாணவர்கள் சிலர், அவளது ஆபரேஷன் செலவுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக திரட்டினர்.
வெற்றி... வெற்றி
இந்நிலையில், அவளுக்கு முதல்கட்ட ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷனின் விளைவாக தலையின் விட்டம் சுமார் 30 செ.மீட்டர் குறைக்கப்பட்டுள்ளது.
சராசரி குழந்தை...
இன்னும் இரண்டு கட்ட ஆபரேஷன்களும், தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளித்தால், சராசரி குழந்தையை போல் ரூனா பேகமும் ஆகி விடுவாள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.