சிவகாசி வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு… நால்வர் கைது
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில், கருப்பையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விளாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது65), சின்னபொட்டல்பட்டி செல்ல கருப்பாயி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் காயம் அடைந்த ஏ.துலுக்கப்பட்டி பரமசிவன் (57), விளாம்பட்டி சங்கர் மகன் மாரீஸ்வரன் (14) உள்பட 18-க்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் நேற்று மதியம் இறந்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மாரீஸ்வரன் பரிதாபமாக இறந்தான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயம் அடைந்த ஒன்றரை வயது குழந்தை மனோஜ்குமார் உள்பட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மாரநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆலை உரிமையாளர்கள் கருப்பையா, முருகன் மேலாளர் பொன்ராஜ், போர்மேன் முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
ஆலையை மூட உத்தரவு
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 29-ந்தேதி முதல் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ததில் 8பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications