அட்சய பாத்திரமாய் திகழும் அம்மா உணவகங்கள்… சமபந்தி போஜனம்
சென்னை: மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது தமிழக அரசு. சென்னையில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ரிக்ஷா தொழிலாளி முதல் ஐடி ஊழியர்கள் வரை தினசரி சாப்பிட்டுச் செல்கின்றனர்.
அம்மா உணவகத்தில் காலையில் இட்லியும் சாம்பாரும், மதியம் தயிர் மற்றும் சாம்பார் சாதம் என மூன்று வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. தரமான அரசி, விதவிதமான காய்கறிகள் ஆகியவற்றோடு சுடச்சுட உணவு தயாராகிறது.
இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் என விலையும் மிக மிக குறைவு. இனி சப்பாத்தியும், பொங்கலும் மெனுவில் கூடுதலாக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தின் சாதனையாக இந்த திட்டத்தை வாயார வாழ்த்துகின்றனர் பொதுமக்கள்.
சமபந்தி போஜனம்
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இங்கு வந்து இருவேளை பசியாறிச் செல்கின்றனர்.
தொழிலாளர்கள்
தினக்கூலியாக 50 முதல் 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு இரண்டு வேலையும் குறைந்த விலையில் வயிராற சாப்பிட முடிகிறது என்கின்றனர்.
ஐடி ஊழியர் பாராட்டு
மாத ஊதியமாக 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் விலை அதிகமான ஓட்டல்களில் சாப்பிடாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடக் காரணம் உணவு தரமாகவும், சுவையாகவும் இருக்கிறது என்பதனால்தான் என்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பார்சல்.
இங்கு பள்ளிக்குழந்தைகளுக்கு தவிர வேறு யாருக்கும் பார்சல் கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு.
சுவையான குடிநீர்
சுவையான கூடுதலாக குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கிடைக்கிறது சமையல் செய்ய, சாப்பிட, பொருட்களை சேமிக்க, பாத்திரம் கழுவ என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இடத்தோடு ஒரு நவீன உணவகத்தின் அத்தனை சிறப்பு அம்சங்களோடும் காட்சி அளிக்கிறது இந்த உணவகம்....
மகளிர் சுய உதவிக்குழுவினர்.
தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 12 பேர் ஒரு உணவகத்தில் பணியாற்றுகிறார்கள். அனைவரின் பசியையும் போக்கும் அட்சய பாத்திராமாக திகழ்கிறது இந்த உணவகம்...
சம்பளம் எப்போது?
இத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னமும் இங்கு வேலை செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நிதியை அதிகரிக்க வேண்டும்
உணவின் ருசியை கண்டு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே அவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து இத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் இடங்களில்…
இதேபோல் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அம்மா உணவகங்களை திறக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.