9 திருநங்கைகள்... 9 மொழிப்பாடல்கள் : இந்தியாவின் முதல் திருநங்கைகள் ஆல்பம்
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 9 திருநங்கைகள் ஒன்றாக இணைந்து, 9 மொழிப்பாடல்களைப் பாடி இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். திருநங்கைகளால் மியூசிக் ஆல்பம் உருவாவது இது தான் இந்தியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டமே வாழ்க்கை என்பதை அறிந்தே திருநங்கைகள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறார்கள். உரிமைக்காக அவர்களின் போராட்டம் சொல்லொண்ணாத் துயரானது.
ஆனாலும், வாழ்க்கையில் எக்காரணத்தைக் கொண்டும் தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதுமையானவை.

இசை மறுப்பு...
8 வயது சிறுவனாக இருந்தபோது, கர்நாடக இசை மீது கொண்ட காதலால் பயிற்சி பெறப் போன பதம்ஷைலிக்கு, இசைப்பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதாம். காரணம் அவனது பெண்மைத்தன்மை மற்றவர்களை பாதிக்கும் என்பதாலாம்.

புறக்கணிப்பின் வலி...
புறக்கணிப்பினால் மனம் தளர்ந்து விடாமல் வேறொரு ஆசிரியரிடம் இசைப் பயின்ற அரவாணியான பதம்ஷைலி-க்கு தற்போது வயது 29. தற்போது தனது இசை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக இந்தியாவின் 9 மொழிகளில் இயற்றப்பட்ட 13 பாடல்கள் அடங்கிய இசை ஆல்பத்தை பதம்ஷைலி உருவாக்கியுள்ளார்.

பறவைகள் பலவிதம்...
அம்ரிதா (மேற்கு வங்கம்), அன்குர் பட்டேல் (குஜராத்), கல்கி சுப்ரமணியம் (பாண்டிச்சேரி), கண்டா லெய்சிங்கதம் (மணிப்பூர்), மதுரிமா (ஆந்திரா), கல்யாணி (மும்பை), ராணி (டெல்லி), ஹன்சா (ராஜஸ்தான்) ஆகியோர் இந்த ஆல்பத்தின் பாடல்களை இயற்றி பாடியும் உள்ளனர்.

தனிமையின் வலி...
ஆல்பத்தின் தயாரிப்பாளரான ஜீவன் டிரஸ்ட்டை சேர்ந்த அபினவ் குப்தா, 'அரவாணிகளின் வலி, வேதனை, தனிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த பாடல்கள் அவர்கள் ஏங்கும் அன்பு, சமூக அங்கீகாரம், அரவணைப்பு ஆகியவற்றையும் சமுதாயத்திற்கு எடுத்துரைக்கிறது' என தெரிவித்துள்ளார்.

நிதியுதவி...
நெதர்லாந்த் 'பிளாணட் ரோமியோ'வின் நிதியுதவி மற்றும் டெல்லி 'அபிவியக்தி' நிறுவனத்தின் ஆதரவுடனும் இந்த இசை ஆல்பம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications