தொடர்ந்து அவதூறாகவே பேசி வருகிறார்கள் கருணாநிதியும், ஸ்டாலினும் - ஜெ. புகார்
ஸ்ரீரங்கத்தில் நேற்று அரசு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது...
தமிழகத்தில் இல்லாமை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதன் அடிப்படையிலும், மனித வளம் சிறப்புற மேம்பாடு அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்துப் பிரிவினரும் உரிய பங்கினை பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், பல்வேறு திட்டங்கள் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகள், தொழில் துறை; சேவை துறை என அனைத்திலும் தமிழகம் முதல் நிலை அடைவதற்கான புதிய திட்டங்களையும் எனது அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள், மாணவ-மாணவியர், தாய்மார்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், இளைஞர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வண்ணம் பல்வேறு புதிய புதிய திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன்.
இது மட்டுமன்றி, பொது மக்களின் வேண்டுகோள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை கவனமுடன் பரிசீலித்து சட்டமன்றம் நடைபெறும் போது, சட்டமன்ற விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, இவை எல்லாம் ‘‘வெறும் அறிவிப்புகள்'' என்று குதர்க்கமாக தெரிவித்தார்.
சட்டமன்றத்திலேயே இதைப் பற்றி நான் விளக்கம் அளித்து, 2011, 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் என்னால் செய்யப்பட்ட 136 அறிவிப்புகளில் 127 அறிவிப்புகள் மீது, முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறி ஒரு சில உதாரணங்களையும் எடுத்துக் கூறினேன்.
அதன் பிறகு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் நிலையை தலை கீழாக மாற்றி, ‘‘முதலமைச்சரோ, அமைச்சரோ பேரவையில் அறிவித்து விட்டால், அவைகளை நடைமுறைப் படுத்தித் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், ‘உறுதிமொழிக் குழு' கேள்வி எழுப்பும்'' என்று கூறி, இவை எல்லாம் செயல்படுத்தப்படும் அறிவிப்புகள் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரது மைந்தர், மு.க.ஸ்டாலின் இது 110 ஆட்சி என்று கூறி, இதில் ஐம்பது சதவீதமாவது நிறைவேற்ற முடியுமா என்று கேள்வி கேட்கிறார். இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருப்பதால், அதைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி இவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இந்த அரசைப் பற்றி, அரசின் திட்டங்களைப் பற்றி, முன்னாள் முதல்வர் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் மனம் போன போக்கில் அவதூறுகளை பேசி வருகின்றனர்.இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், நான் முனைப்புடன் செயல்பட்டு வந்தாலும்; என் மீது அளவு கடந்த பாசத்தை பொழியும் உங்களைச் சந்திப்பதும்; தேர்தல் நேரத்தில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் தான் என் தலையாயக் கடமை என்று கருதி, நான் தற்போது நான்காவது முறையாக இன்று உங்கள் முன் உரையாற்றுகிறேன் என்றார் அவர்.