தர்மபுரி காதல் கலப்பு திருமணம்: என் மகளை மிரட்டினார்கள்… திவ்யாவின் தாயார் புகார்
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கலவரம் மூண்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கூட கொண்டாடாமல் நத்தம் காலணி கிராமத்தினர் சிரமத்திற்குள்ளாகினர்.
ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் திடீரென்று காதல் தம்பதிகள் இருவரும் நேற்று பிரிந்தனர். திவ்யா தனது தாயாருடன் செல்ல ஒப்புக்கொண்டு கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
கணவர் இளவரசனும், அவரது உறவினர்களும் தனது மகள் திவ்யாவை மிரட்டியதாக புகார் கூறியுள்ளார் அவரது தாயார் தேன்மொழி. இது குறித்து தேன்மொழி கூறியதாவது:
தர்மபுரியில் நர்சிங் படித்துவந்த தனது மகள் திவ்யாவை கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி இளவரசனும் அவரது உறவினர்களும் கடத்திச் சென்று விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற தனது கணவர் நாகராஜை போலீசார் அவமானப்படுத்தியதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் கலவரம் மூண்டது.
சில தினங்களுக்குப் பின்னர் நவம்பர் 23ம் தேதி தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட திவ்யா, கணவருடன் செல்ல விரும்புவதாக கூறவே இளவரசன் குடும்பத்தினருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தனை நாட்களாக எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் கடந்த வாரம் எனது மகளிடம் இருந்து எனக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் மிரட்டுவதாகவும், இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் என்னிடம் கூறினாள். எனவேதான் என்னுடன் வந்துவிடுமாறு நான் கூறியதை அடுத்து இப்போது எனது மகள் திவ்யா எங்களுடைய வீட்டிற்கு மீண்டும் வந்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.