49 மீனவர்கள் விடுதலை கோரி 22-ந் தேதி இலங்கையில் தஞ்சமடையும் போராட்டம்!
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களை வரும் 20-ந் தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால் 22-ந் தேதி வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சமடையும் போராட்டத்தை நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் வரும் 20-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகள் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 49 மீனவர்களையும் வரும் 20-ந் தேதிக்குள் விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்யாவிட்டால் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து விசைப் படகுகளும் 22-ந் தேதி வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கை நோக்கிப் பயணித்து அங்கு தஞ்சம் அடையும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடரும் நிலையில் இனிமேல் அதிகாலை 6 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மேல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்றும் இதில் முடிவு எடுக்கப்பட்டது.