கனிமொழிக்கு காங்கிரஸிடம் ஆதரவு பெற்ற திமுகவின் புதிய நாடகம் நகைப்பிற்குள்ளாகியுள்ளது: சரத்குமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடைபெறும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் திமுகவின் புதிய நாடகம் அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது.
ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்பட வேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
எண்ணிக்கை அடிப்படையில் கனிமொழி ஒருவேளை வெற்றி பெற்றாலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழின விரோத காங்கிரஸ் கூட்டணியை புறமுதுகிட்டு ஓடச்செய்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமையும் கூட்டணிக்கு புதுவையுடன் சேர்த்து வாக்காளப் பெருமக்கள் நாற்பதையும் அளித்து ஏற்றமடையச் செய்வார்கள் என்பது உறுதி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications