பரிதி இளம்வழுதி மகனை புழல் சிறையில் சந்தித்த மு.க. ஸ்டாலின்: சிறை வாசலில் திமுக-போலீஸ் தள்ளுமுள்ளு

திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி திமுக மாணவர் அணி அமைப்பாளர் ஆவார். அவர் அயனாவரத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புழல் சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு யாரையாவது பார்க்க சென்றால் முதன்மை நுழைவாயில் வழியாக காரில் செல்வார். ஆனால் இன்று அவர் காரை நுழைவாயிலில் போலீசார் நிறுத்தினர். மேலும் காரை உள்ளேவிட அனுமதி மறுத்தனர்.
இதனால் அங்கே கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் முடிந்தது. இதையடுத்து ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி முதன்மை நுழைவாயில் வழியாக நடந்து உள்ளே சென்றார். அவர் சுருதியை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார். ஸ்டாலினுடன் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் சென்றனர்.
பின்னர் சிறை வாசலில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனை உள்ளபோது திமுகவினர் மீது வழக்கு தொடர்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதிமுக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications