குற்றவாளியை கைது செய்யக் கோரி, குழந்தைகளோடு சுடுகாட்டில் குடியேறியவர்கள் கைது
திருவாரூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை தாக்கியவர்களை விரைவில் கைது செய்யக் கோரி, சுடுகாட்டில் குடியேறியுள்ள மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்த, வெற்றி என்ற வெற்றிச்செல்வன்(வயது42), விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் தாக்கப் பட்டார்.
தற்போது, படுகாயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெற்றி. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் கம்மாளத்தெரு சுடுகாட்டில் குடியிருக்கும் போராட்டத்தை கடந்த 3 நாட்களாக நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மன்னார் குடி உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) பொறுப்பில் உள்ள ராஜேஸ்வரி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், மற்றும் முத்துப்பேட்டை போலீசார் ஆகியோர் வெற்றியின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது பலனலிக்காத காரணத்தால், டி.எஸ்.பி. பாஸ்கர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பொதுமக்கள் குடியேறிய சுடுகாடு பகுதிக்கு சென்றனர்.
சட்டத்தை மீறி சுடுகாட்டில் குடியிருந்ததாகக் கூறி, அப்போது, அங்கு குடியிருந்த 20 ஆண்கள், 8 பெண்கள் 2 குழந்தைகள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.