சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் கண்ணியமாக நடந்த இளவரசன் இறுதிப் பயணம்!
தர்மபுரி: கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உணர்ச்சியலைகளைக் கிளப்பிய இளவரசனின் இறுதி நிகழ்வுகள் எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் மிகுந்த கண்ணியமான முறையில் நேற்று நடந்து முடிந்தன.
திவ்யா என்ற வன்னிய இனப் பெண்ணை காதலித்து மணந்த இளவரசன், வாழ்க்கையின் மிக இளம் வயதில் யாரும் சந்திக்க முடியாத சோதனைகளைச் சந்தித்து, மனைவியைப் பிரிந்து, கடைசியில் இந்த உலகையும் பிரிந்து போனார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டதால், மறு பிரேத பரிசோதனையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நடத்தினர்.
நேற்று இளவரசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இளவரசனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், பெண்கள்.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி மறுத்துவிட்டது மாவட்ட நிர்வாகம்.
இளவரசன் மனைவி திவ்யா மற்றும் அவர் குடும்பத்தவர் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, எம்எம்ஏ ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர். போலீசின் தடையை மீறி சிவகாமி ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் இருமாவட்ட போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். எல்லோரும் பெரிதாக ஏதோ நடக்கப் போகிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க, இளவரசன் இறுதி நிகழ்வை மிகுந்த கண்ணியத்துடன் அமைதியான முறையில் நடத்தி முடித்தனர் அவரது பெற்றோரும் நண்பர்களும் உறவினர்களும்.
ஒரு காதலுக்காக 300 குடிசைகள் கொளுத்தப்பட்டு, மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் விதமாக, அமைந்தது இளவரசனின் இறுதி நிகழ்வுகள் என பாதுகாப்புக்கு வந்த போலீசார் இளவரசனின் நண்பர்களிடம் கூறியதோடு, இந்த அமைதி தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.