ஒரே மாதத்தில் 123 கிலோ தங்கம்... ஒரே நாள் வசூல் ரூ. 3.19 கோடி: திருப்பதி கோவிலில் குவிகிறது
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 123 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் ஞாயிறன்று மட்டும் ரூ.3.19 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்று திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்க நாணயம், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
இந்த காணிக்கை பொருட்கள் தினம் தினம் எண்ணப்படும். கடந்த 2 நாட்களாக விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் உண்டியல் மூலம் ரூ.3.19 கோடி வசூலானது.
1 மாதம் உண்டியல் மூலம் கிடைக்கும் தங்கம் சேர்க்கப்பட்டு தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும். அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் மட்டும் 123 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்து உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.