நீதிமன்றத்தை அவமதிப்பதா? நேரில் ஆஜராகனும்.... சகாரா நிறுவன தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
டெல்லி: முதலீட்டாளர்களுக்கு பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்கா விட்டால் சகாரா குரூப் நிறுவனத் தலைவர் சுபத்ரா ராய் நேரில் ஆஜராகவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
சகாரா குழுமத்தைச் சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய 24,000 கோடியை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 31ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சகாரா நிறுவனம் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிசம்பரில் அளித்த உத்தரவில், செபியிடம் சகாரா நிறுவனம் முதல் தவணையாக 5,120 கோடியும், மீதியை பிப்ரவரிக்குள் செலுத்தமாறு உத்தரவிட்டது. அதையும் சகாரா பின்பற்றவில்லை. இதனால், சகாரா நிறுவன சொத்துக்களை முடக்க செபி நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ். கேகார் ஆகியோர் முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாத சகாரா நிறுவனத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முழு தொகையையும் முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்ற அவமதிப்புக்காக நிறுவன தலைவர் சுப்ரதா ராய் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரித்தனர். இதன்பின், வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.