ஆகஸ்ட் 2ல் திருமயத்தில் பெல் நிறுவனத்தை திறந்து வைக்க பிரமதர் வருகிறார்
திருச்சி: திருமயம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பெல் நிறுவனத்தை திறந்து வைக்க பிரமதர் மன்மோகன் சிங் தமிழகம் வருகின்றார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த ஓலைக் குடிப்பட்டியில் பாய்லருக்குத் தேவையான பைப்புகளை தயார் செய்வதற்காக பவர் பிளாண்ட் பைப்பிங் யூனிட் அமைக்க பாரத மின் மிகு நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக 2009ம் ஆண்டு 57 ஏக்கர் பரப்பில் ரூ. 400 கோடியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இதன் திறப்பு விழா வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கின்றார்.
மன்மோகன்சிங் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 7.00 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 11.05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருமயம் செல்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பெல் நிறுவன கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மதியம் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 1.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்பு, தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி திருமயம் பெல் நிறுவன பகுதியில் திருச்சி சரக டி.ஐ.ஜி அமல் ராஜ் மேற்பார்வையில் 8 எஸ்.பி.க்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.