இ-மெயில் தமிழன் ‘சிவா அய்யாத்துரை’ நாளை சிவகாசி விஜயம்
சிவகாசி: முதன் முதலில் இமெயிலை உருவாக்கி பயன்படுத்திய தமிழரான சிவா அய்யாத்துரை நாளை சிவகாசி பொறியியல் கல்லூரிக்கு வருகை தர இருக்கிறார்.
‘குடைக்குள் உலகமாக' தொடர்பு கொள்ளும் முறைமையை எளிதாக்கிய இ-மெயிலைக் கண்டறிந்தவர் ஒரு தமிழர் என்பதே நமக்கு மிகவும் பெருமையான விஷயம். தற்போது ‘சைட்டோ சால்வ்' என்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சிவா, நாளை சிவகாசியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றிற்கு வருகை தந்து, மாணவர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இது குறித்து அக்கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இமெயில் தமிழன்...
உலகம் முழுவதும் தற்போது பெரும்பாலானோர் தகவல் தொடர்புக்கு இ-மெயிலை பயன்படுத்துகின்றனர். இந்த இ-மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர். இவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர்.
டாக்டர் இ-மெயில்...
டாக்டர் இ-மெயில்' என அழைக்கப்படும் இவரது பெயர் வி.ஏ. சிவா அய்யாத்துரை. இவர் 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லிவிங்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இ-மெயிலை கண்டுபிடித்தார்.
35க்கும் மேற்பட்ட நூல்கள்...
இதுவரை சிவா அய்யாத்துரை 19 புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். தற்போது அவர் "சைட்டோ சால்வ்' என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கணினி உள்ளிட்டவை குறித்து 35-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
தொழில் நுட்பப் புதுமைகளின் தேவை...
44 கல்வி சார்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் "தொழில்நுட்பப் புதுமைகளின் தேவை' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்' என கூறியுள்ளார்.