ஆந்திரா பந்த்: திருப்பதி கோவிலில் கூட்டமில்லை... 3 மணி நேரத்தில் தரிசனம்

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்த விவகாரம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் பிரிக்கப்பட்டதை கண்டித்து ராயலசீமா, கடலோர ஆந்திராவில் நேற்று ‘பந்த்' போராட்டம் நடந்தது. இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது. ‘பந்த்' காரணமாக திருப்பதிக்கு எந்த பேருந்தும் இயங்கவில்லை.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ் போக்குவரத்து நடந்தது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்தது. எப்போதும் பக்தர்கள் நெரிசலாக காணப்படும் இடங்கள் வெறிச்சோடி கிடந்தது.
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் கம்பார்ட்மெண்டுகள் கூட நெரிசல் இன்றி காணப்பட்டது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலும், 300 ரூபாய் சிறப்பு கட்டணம் தரிசன பக்தர்கள் 1 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிந்தது. தர்ம தரிசனத்துக்கு நின்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பினர்.
நேற்று காலை முதல் மாலை வரை 40 ஆயிரம் பக்தர்களே தரிசனம் செய்தனர்.பக்தர்கள் குறைந்ததால் கடைகளில் வியாபாரமும் மந்தமானது. இன்றும் பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் கூட்டம் மேலும் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications